கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் ஒன்று முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட நிலையில் 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நடந்த 5-ம் கட்ட அகழாய்வில் 33 குழிகள் தோண்டப்பட்டு இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்புப் பொருட்கள், செப்பு, வெள்ளிக் காசுகள், தண்ணீர் குவளை, சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

இந்நிலையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு நடத்த ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு பிப்.19-ம் தேதி அகழாய்வுப் பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொந்தகையில் பழமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணிக்காக சில தினங்களுக்கு முன் சுத்தப்படுத்தியபோது முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது.

கீழடியில் ஒருவரது நிலத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது. அதில் மூன்றரை அடி ஆழத்தில் செங்கல் சுவர் ஒன்று முதன்முதலாகக் கண்டறியப்பட்டுள்ளது. இச்சுவர் ஒரு அடி வரை உள்ளது. முழுமையாகத் தோண்டும்போதுதான் அந்தச் சுவரின் உயரம், நீளம், அகலம், மேலும் சுவர்கள் இருக்கின்றனவா என்ற விவரம் தெரியவரும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: