கீழக்கரை அருகே தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு!

கீழக்கரை அருகே தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு!

கீழக்கரை அருகே தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு!

கீழக்கரை அருகே நத்தத்தில் சங்ககால ஊர் இருந்த வரலாற்று தடயத்தையும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கற்கோடரியையும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்களான கவியரசன், விஷால், வினித், காளீஸ்வரன், யுவராஜ், அருள்தாஸ் ஆகியோர் வரலாற்றுத் தேடலில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நத்தம் எனும் ஊரில் மேற்கொண்ட தேடல் முயற்சியின்போது புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு கற்கோடரியைக் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து தங்கள் ஆசிரியர்களான செல்வக்குமார், முனியசாமி ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு மாணவர்கள் கண்டெடுத்த கற்கோடாரியை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து ராஜகுரு கூறுகையில், “ஆய்வு மேற்கொண்ட மாணவர்கள் நத்தம், குலபதம் ஆகிய இரு ஊர்களுக்கு இடையில் உள்ள சுப்பாத்தா குளத்தின் மேற்குக்கரையில் கானத்திடலில் உள்ள ஒரு தோப்பில் பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில் கற்கோடரியைக் கண்டெடுத்துள்ளனர்.

அப்பகுதியில் மாணவர்களுடன் மீண்டும் நாங்கள் கள மேற்பரப்பாய்வு செய்தபோது, கறுப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், இரும்புத் தாது, இரும்புத்துண்டு, அரைப்புக்கல், வட்டச்சில்லுகள், மான் கொம்பின் உடைந்த பகுதிகள், மணி செய்யும் கற்கள் ஆகியவற்றைக் கண்டெடுத்தோம். சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள கானத்திடல் பகுதி முழுவதும் பழைமையான பானை ஓடுகள் காணப்படுகின்றன.

பெருங்கற்காலம் முதல் கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்களை மக்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். எனினும் கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான சங்க காலத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் இதை சங்ககாலப் பானை ஓடுகள் என்கிறார்கள். கி.மு.3,000 முதல் கி.மு.1000 வரையிலான காலத்தைச் சேர்ந்த புதிய கற்கால மனிதர்கள் வழுவழுப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தினர். இங்கு கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தைச் சேர்ந்தது. இதன் நீளம் 5.8 செ.மீ. அகலம் 5.2 செ.மீ. கருங்கல்லால் ஆன இதை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி உள்ளனர். இதன் அகன்ற வெட்டும் பகுதியின் முனை மழுங்கியுள்ளது. மரத்தாலான தடியில் கட்டி இதைப் பயன்படுத்துவார்கள். இது சுமார் 5,000 ஆண்டுகள் பழைமையானது. புதிய கற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த இந்த கற்கோடரியை சங்க காலத்திலும் தொடர்ந்து பாதுகாத்து வந்திருக்கலாம். கறுப்பு சிவப்பு பானை ஓடுகள் கிடைப்பதன் மூலம் இவ்வூர் சங்க காலத்தில் மக்கள் குடியிருப்பாக வைகை ஆற்றின் கரையில் அமைந்த ஒரு ஊராக இருந்துள்ளதை அறியமுடிகிறது.

இந்த ஊரின் அருகே பனையங்கால் என்ற வைகையின் ஒரு கால்வாய் ஓடுகிறது. பனையன் என்பது சங்க காலப் பாண்டியருடன் தொடர்புடைய பெயராக உள்ளது. இதன் அருகே வைகை என்ற பெயரில் ஒரு ஊரும் உள்ளது. வைகை ஆற்றின் எல்லையைக் குறிக்கும் விதத்தில் வடக்கே தேவிப்பட்டினம் அருகிலும், தெற்கே கீழக்கரை அருகிலும் வைகை என்ற பெயரில் இரு ஊர்கள் அமைந்துள்ளன. புதிய கற்காலக் கருவிகள் தென் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் போகலூரில் சங்ககால வாழ்விடப்பகுதியில் ஒரு கற்கோடரியை 2017-ல் கண்டெடுத்துள்ளனர்.

இந்தத் தொல்பொருள்கள் பண்ணைக்குட்டை தோண்டிய சிறுபகுதியில் மட்டும் கிடைத்தவை. கானத்திடலின் மற்ற பகுதிகள் மேடாக உள்ளன. எனவே, தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்து கீழக்கரை பகுதியின் சங்ககாலத் தொடர்பை வெளிக்கொணர வேண்டும்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: