எழுத்துச் சீர்திருத்தமும்- தேவநேயப் பாவாணர் கொள்கையும்!

எழுத்துச் சீர்திருத்தமும்- தேவநேயப் பாவாணர் கொள்கையும்!

எழுத்துச் சீர்திருத்தமும்- தேவநேயப் பாவாணர் கொள்கையும்!

புதிய எழுத்துச் சீர்திருத்தக் கொள்கையில் பாவாணர்க்கு உடன்பாடில்லை. அவருடைய நூல்கள் எவற்றிலும் எழுத்துச் சீர்திருத்த முறை பின்பற்றப் படவுமில்லை. திரு. ம.கோ.இரா. (M.G.R) அவர்கள் ஆட்சியில், தமிழக அரசு வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய எழுத்து மாற்றக் கருத்தரங்கிலும் பாவாணர் அரசு அதிகாரியாக இருந்து கொண்டே அதற்கு எதிராகத் தம்முடைய கருத்தைத் தெரிவித்தார்.

பெரியார் நூற்றாண்டு விழாவினையொட்டி அன்றைய அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி கருத்துத் தெரிவித்த பாவாணர், பண்டைக் காலத்தில் தமிழெழுத்துக்கள் னா, ணா, னை, ணை, லை, ளை, ஆகிய வடிவங்களிலேயே இருந்தன. அம்முறை மயக்கத்தை விளைத்ததாலும், காலமும் தாள்செலவும் கூடுதலானதாலும் அம்முறையினை மாற்றி முறையே னா, ணா, னை, ணை, லை, ளை என்பதை ( ஓணான் வால் போல் சுருட்டியும், யானை துதிக்கை போன்று வளைந்து உள்ள எழுத்துகளாக) திருத்தியமைத்தனர்.

அதுவே உண்மையான எழுத்துச் சீர்திருத்த மென்றும், எழுத்து வடிவம் பற்றி அரசு வெளியிட்ட அறிவிப்புச் சீர்கேடேயன்றிச் சீர்திருத்தமன்று என்றும் கூறினார். தந்தை பெரியார் சிக்கனம் கருதியே தாம் வெளிட்டு வந்த ‘விடுதலை’ நாளிதழில் அச்சு செலவைக் குறைக்கும் வகையில் அவ்வாறு எழுத்து மாற்றம் செய்தாரேயன்றித் தமிழை வளமாக்கும் நோக்கத்தில் அன்று.

அது போன்றே, இந்தியையும் தமிழ்ப் பற்றால் எதிர்க்கவில்லை. பேராயக்கட்சியைத் தாக்கவல்ல ஒரு நல்ல கருவி இந்தியெதிர்ப்புதான் என்று பெரியாரே தம்மிடம் வெளிப்படையாகக் கூறியதாகப் பாவாணர் உரைத்தார். மேலும், “நான் (பாவாணர்) இருபத்தைந்து ஆண்டுக்கு மேல் பெரியாரோடு தொடர்பு கொண்டிருந்தேன். அப்போது ஒருமுறை கூட அவர் பொதுமேடையிலோ என்னிடமோ எழுத்து மாற்றத்தைப் பற்றிப் பேசியதில்லை. 1938இல் அவர் ஈரோட்டிலிருந்து எனக்கு எழுதிய ஏழு பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே இருந்தது. 1947இல் எனக்கும் புலவர் பொன்னம்பலனார்க்கும் பெரியார் வழங்கிய வெள்ளிப் பட்டயத்திலும் மரபெழுத்தே பொறிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறுகின்றார் பாவாணர்.

அது மட்டுமின்றி, பாவாணர் ஒரு முறை பெரியாரை அவர் தம் இல்லத்திற் கண்ட போது, எழுத்து மாற்றம் பற்றி அவருடன் பேசினார். அதற்குப் பெரியார் தமிழைப் பற்றி எனக்கென்ன தெரியும்? அதையெல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். புதிய எழுத்து மாற்றத்தில் பாவாணருக்கு எப்போதுமே உடன்பாடில்லை!

(பாவாணர் மகன் தே.மணி எழுதிய ‘பாவாணர் நினைவலைகள்’ பக்.15,16 நூலிலிருந்து. )

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: