திருவாடானை அருகே சோழர் கால வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு!

திருவாடானை அருகே சோழர் கால வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு!

திருவாடானை அருகே சோழர் கால வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு!

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் திருவாடானைப் பகுதியில் மேற்கொண்டிருந்த கள ஆய்வின்போது, செம்பிலான்குடி சிவன் கோயில் அருகே நவகண்ட சிற்பத்தைக் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், வீரர்கள் போரில் தன் அரசனுக்கு வெற்றி கிடைக்கவும், தன் தலைவன் உடல் நலம் பெறவும், ஊரின் நன்மைக்காகவும், காளி, கொற்றவை உள்ளிட்ட தெய்வங்களை வேண்டிக்கொண்டு, அக்கோயில் முன்பு வாளால் தங்கள் தலையை தாங்களே அரிந்து அத்தெய்வங்களுக்கு காணிக்கையாகக் கொடுப்பர். இதனை, கல்வெட்டுகள் தூங்குதலை குடுத்தல் என்கின்றன. இந்த முரட்டு வழிபாடு தலைப்பலி, நவகண்டம் எனவும் அழைக்கப்படுகிறது.

அன்பின் மிகுதியால் தனக்கென வாழாது, நாட்டின் நலனுக்காக தன் தலையையோ அல்லது உடல் உறுப்புகளையோ காணிக்கையாகத் தரும் வழக்கம் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இதை உதிரப்பட்டி என்பர். இவ்வாறு இறந்தவர்களை சாவான்சாமி என தெய்வமாகவும் வணங்குகிறார்கள். நவகண்டம் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்பரணி போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. பாண்டிய நாட்டில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மல்லல், குன்றக்குடி, விருதுநகர் மாவட்டம் மன்னார்கோட்டை, மதுரை மாவட்டம் தென்கரை, திண்டுக்கல் மாவட்டம் பழனி, அம்மையநாயக்கனூர் ஆகிய இடங்களில் ஏற்கெனவே நவகண்ட சிற்பங்கள் கிடைத்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக தற்போது செம்பிலான்குடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது கிடைத்துள்ள நவகண்ட சிற்பத்தில் மேலே கல்வெட்டும், கீழே பீடமும், நடுவில் வீரனின் புடைப்புச் சிற்பமும் உள்ளன. வீரனின் வலது கையில் உள்ள வாள் கழுத்தை அறுப்பது போலவும், இடது கையில் உள்ள குறுவாள் வயிற்றுப் பகுதியில் இருப்பது போலவும் சிற்பம் அமைந்துள்ளது. வீரனின் சிற்பம் 2.5 அடி உயரம் உள்ளது. அவர் காலில் செருப்பு அணிந்துள்ளார். அழகிய ஆடை, ஆபரணங்களுடன் சிற்பம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிற்பத்தின் மேலுள்ள கல்வெட்டு தேய்ந்து அழிந்துள்ளது. இதில் உள்ள சில எழுத்துகளை மட்டும் படிக்க முடிகிறது. இந்த கல்வெட்டு பாண்டியநாடு சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த கி.பி.11ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் அளித்துள்ளார். நவகண்டம் கொடுக்கும் வழக்கம் சோழ நாட்டுப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. பாண்டிய நாட்டுப் பகுதிகளில் இவ்வழக்கம் பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினகரன்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: