அறிவியல் துறையின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு 1928 பிப்ரவரி 28! தேசிய அறிவியல் தினம்!

சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார்.

இவர் 1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்

சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.

இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிப்புகளின் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணனுடன் சேர்ந்து அதன் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இவர் இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.

இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமன் விளைவு என்பது என்ன?

ராமன் விளைவைப் புரிந்துகொள்வதற்கு முன் ஒளி பற்றிய சில அடிப்படைக் கோட்பாடுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ‘‘ஒளி என்பது அலைகளால் ஆனது” என்று தாமஸ் யங் என்ற விஞ்ஞானி 1801-ல் கூறினார். “ஒளி என்பது துகள்களால் ஆனது” என்று ஏற்கெனவே சர் ஐசக் நியூட்டன் கூறியிருந்தார். இதை யங் எப்படி மாற்றிக் கூறலாம் என்று நியூட்டனின் ஆதரவாளர்கள் குரலெழுப்பினர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளார்க் மாக்ஸ்வெல் என்ற விஞ்ஞானி ஒளி, வெப்பம் போன்ற எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான் என்றும், அவை அலைகளாக பயணம் செய்கின்றன என்றும் கூறினார்.

இரண்டு வெவ்வேறு அலைகளின் நீளத்தைக் கணக்கிடுவதை அலை
நீளம் (wave length) என்று கூறுகிறோம். வயலட் நிறத்தின் அலை நீளம் மிகச் சிறியது. சிவப்பு நிறத்தின் அலை நீளம் மிக நீண்டது. பெரிய அலை நீளம் கொண்ட நிறங்கள், தொலைதூரம் பயணம் செய்யும். சாலைகளில் சிவப்பு விளக்கு சிக்னல் தொலை தூரத்திலிருந்தே நமக்குத் தெரிவது இதனால்தான். எலும்புகளின் புகைப்படத்தை எக்ஸ்ரே எடுப்பதற்கும், தொலைக்காட்சியில் ஒலி, ஒளி தெரிவதற்கும் காரணமான அலைகள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப, ஒலி அலைகள்தான்.

ஒளி அலைகள் வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர் பயணம் செய்கின்றன. ஒளியியல் சம்பந்தமான விஷயத்தில் அலைகளின் கோட்பாடு முக்கியமாகக் கருதப்பட்டாலும், ஒளியின் அத்தனை விஷயங்களையும் அலைகளின் கோட்பாட்டால் விளக்க முடியவில்லை. “வெப்பமும் ஒளியும் ஒரு பைக்குள் அடைக்கப்பட்ட சக்திகள். இவ்வாறு பைக்குள் அடைக்கப்பட்ட ‘ஒலி’ சக்தியின் (Light Energy) பெயர் போடான்ஸ்” என்று மாக்ஸ் பிளாங்க்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூறினார்கள்.

ஒளி போடான்ஸால் ஆனதா, அலைகளால் ஆனதா என்ற விவாதம் கிளம்பியது. “இரண்டிலிருந்தும்தான்” என்று சிலர் கூறினர். தண்ணீர் மழைத்துளியின் மூலமாகவும் வருகிறது, பெரிய அலை போலவும் நதிகளில் பாய்கிறது. இதே போல்தான் ஒளியும் என்று வாதம் செய்யப்பட்டது.

இப்படி வாதங்கள் நடந்த வேளையில்தான் சர். சி.வி. ராமன் ஒளியியல் கோட்பாட்டில் முக்கியமானதொரு விஷயத்தைக் கண்டுபிடித்தார். “ஒளி என்பது திரவம், வாயு மற்றும் கெட்டியான பொருட்களின் ஊடே செல்லும்போது, அதன் தன்மை மாறுபடுகிறது” என்று ராமன் கூறினார். “ கேரம்போர்டில் ஸ்டிரைக் கரைச் சுண்டியதும், போர்டில் உள்ள பல்வேறு காய்கள் சிதறி வெவ்வேறு திசை நோக்கி நகர்வதைப்போல ஒளியின் பயணம் மாறுபடுகிறது” என்று கூறினார். இதையே ‘ராமன் விளைவு’ என்று அழைக்கிறோம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: