அதியமான் கோட்டை வரலாறு!

அதியமான் கோட்டை வரலாறு!

அதியமான் கோட்டை வரலாறு!

அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை களிமண்ணால் வட்ட வடிவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோட்டை ஒரு மிக முக்கிய சுற்றுலா தலமாகும்.

இந்த கோட்டையை சுற்றிலும் ஒரு ஏரி உள்ளது. இந்த ஏரியை இந்த பகுயில் இருப்பவர்கள் மிக முக்கியமான ஒன்றாக கருதுகின்றனர். மன்னர் அதியமான் காலத்தில் அவரது அரசின் தலைநகராக தர்மபுரியும், அவரது கோட்டையாக இந்த அதியமான் கோட்டையும் விளங்கி இருக்கிறது. இந்த அதியமான் கோட்டைக்கு செல்ல ஏராளமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு கொடுத்தான். இந்த அதியமானால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாக அறியப்படுகிறது. இக்கல்வெட்டு அதியமானை பற்றியதே என்றும் குறிப்பிடுகிறது.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகப் பேரரசன் ஒரு கல்வெட்டில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சத்தியபுத்திரர் ஆளும் நாடுபற்றிக் குறிப்பிட்டுள்ளான். இது அதியமான்களின் நாட்டையே குறிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.

அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த குறுநில மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர்.

இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் இறந்தது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அக்காலத்து அதியமான்களுள் இவனைப் பற்றியே அதிக தகவல்கள் தெரியவருகின்றன. பல சங்கத் தமிழ் நூல்களில் இம்மன்னனைப் பற்றிய குறிப்புக்கள் கணப்படுகின்றன.

• புறநானூறு
• அகநானூறு
• குறுந்தொகை
• பதிற்றுப்பத்து
• சிறுபாணாற்றுப்படை

ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன.

ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவனைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன. திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்; சேரன் சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். இவனது அரண்மனை இல்லையென்று வருவோர்க்கு அடையாத வாயிலைக் கொண்டது என்றும், அவனது கைகள் மழையைப் போல் ஈயும் தன்மையது என்றும் பாடல்கள் அவனைப் புகழ்கின்றன. தனக்குக் கிடைத்த சாவா மருந்தாகிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாது ஔவையாருக்குக் கொடுத்தான் என்றும் அவனது கொடையின் திறம் பேசப்படுகிறது.

அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவனுடன் போரிட்டு அவனது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தான். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும் அஞ்சி இப்போரில் தோற்று இறந்தான். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.

மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. “சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி” என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது.

அதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு குறுநில மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில்கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.

அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந்நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற்பெயர்கள் இடம்பெறவில்லை. இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

இராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட சிற்றரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் குறுநில மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன

இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது. தர்மபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக்கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன.

விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியர் மரபைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப்பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது.

9ம் நூற்றாண்டில் தகடூரில் ஏராளமான இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் நடந்த போர்களில் மன்னர் அதியமானால் வெற்றி பெற முடியவில்லை. அப்போது, ஜோதிடர்கள், நமது கோட்டையில் காலபைரவரை பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபட்டால் வெற்றிகள் வசமாகும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர். காலபைரவருக்கு தனிக்கோயில் காசியில் மட்டுமே உள்ளது. எனவே அங்கு சென்று சிலைகளை எடுத்து வந்து இங்கு வைத்து பூஜைகள் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மன்னர் அதியமான், காசியில் இருந்து சிலைகளை கொண்டு வந்து கட்டிய வரலாற்று சிறப்புக்குரியது தான். இந்த வரலாறு, கோயிலில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டிய பின்பு நடந்த போர்கள் அனைத்திலும் வெற்றிகளை குவித்துள்ளார் மன்னர் அதியமான். போருக்கு செல்லும் முன்பு, காலபைரவரின் காலடியில் வாளை வைத்து வணங்கி, பூஜை செய்து வழிபட்ட பின்பே மன்னர் புறப்படுவார். அதன் அடையாளமாகவே கோயிலில் வாள் வைக்கப்பட்டுள்ளது. மன்னருக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் காலபைரவர் குலதெய்வமாக விளங்கி உள்ளார். கோட்டையின் சாவி காலபைரவரின் கைகளில் தான் எப்போதும் இருக்கும். இக்கோயில் 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும் சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.

விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: