கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல் கண்டுபிடிப்பு. இக்கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.

‘கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும்,மற்றொரு இளைஞரும் தன்னுயிரை இழந்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் முதல் வரி சிதைந்துள்ளதால், மற்றொரு இளைஞரின் பெயரை அறிய முடியவில்லை.இந்தக் கல்வெட்டானது புதைந்த நிலையிலிருந்து 64 செ.மீ. உயரமும், 35 செ.மீ. அகலமும் உள்ளது.கருங்கல் பலகையின் மேற்பகுதியில் ஏறத்தாழ 20 செ.மீ. அளவுக்கு கல்லைச் சமன்படுத்தி இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டை அடுத்துள்ள கீழ்ப் பகுதியில் 8 செ.மீ. ஆழத்தில் இளைஞர் ஒருவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஓங்கிய குத்துவாளுடன் வலக்கையை உயர்த்தியுள்ள அவரது இடக்கை முஷ்டி முத்திரையில் உள்ளது.

செவிகள் நீள்வெறுஞ் செவிகளாகவும், இடையில் வரிந்து கட்டிய சிற்றாடை, இடுப்பில் மற்றொரு குறுவாளும் உள்ளது. சிற்றாடையின் முந்தானை வலப்புறம் இருக்க, மடியை மறைக்குமாறு முக்கோணத் தொங்கலாக ஆடையின் கீழ்பகுதி இறக்கிவிடப்பட்டுள்ளது. தலைமுடி இரண்டு சுருள்கள் கொண்ட கொண்டையாக முடியப்பட்டுள்ளது. இந்த நடுகல்லின் தலைப்பகுதியில் காலம், காலமாக கத்தி, அரிவாள் போன்ற கருவிகளைத் தீட்டி கூர்மைப்படுத்தும் பழக்கம் இருந்ததே கல்வெட்டின் முதல்வரி சிதைந்ததற்கு காரணம். இதுபோன்ற பழக்கம் சங்க காலத்திலிருந்தே மலைவாழ் மக்களிடம் இருந்துள்ளது.

சங்க காலப் பாலை நில மரவர்கள் தங்கள் அம்புகளை இதுபோன்ற நடுகற்களின் மேற்பகுதியில் தொடர்ந்து தீட்டியதால் அங்குள்ள எழுத்துகள் சிதைந்து, அவ்வழிச் செல்வோர் நடுகல்லில் பொறிக்கப்பட்டுள்ள செய்தியைப் படித்து புரிந்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

சங்க காலப் பழக்கம் பின்னாளிலும் தொடர்ந்துள்ளது என்பதற்கு இந்த நடுகல் சான்றாக அமைந்துள்ளது இதுதொடர்பாக, தொல்லியல் துறைக்கும், கல்வெட்டு ஆராய்ச்சி துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: