1964 ஆழிப் பேரலையின் போது தனுஷ்கோடி-யில் நடந்தது என்ன?

1964 ஆழிப் பேரலையின் போது தனுஷ்கோடி-யில் நடந்தது என்ன?

1964 ஆழிப் பேரலையின் போது தனுஷ்கோடி-யில் நடந்தது என்ன?

டிசம்பர் 22, 1964 – தனுஷ்கோடியின் அன்றைய தினம் அதிகாலை முதலே வழக்கத்தை விட காற்றும் மழையும் அதிகமாகவே காணப்பட்டது.

அன்றைய தினம் கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை ‘புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது….’ என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தாக்கம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின்னர் மட்டுமே உணரமுடிந்தது.

ரயில் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும். தனுஷ்கோடி – பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55 க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார்.

தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து காணப்பட்டன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும்’ என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தின் தாக்கத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.

எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே, ரயில் வருவதை தெரிவிக்க…. தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகர்த்த ஆரம்பித்தார். அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்?

பெருங்காற்றுத் தொடர்ந்த ஆழிப்பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் இரயில் பெட்டிகளோடே கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதுதான் அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் இதுவரை காணாமல் போன அந்த இரயிலின் நிலை எவருக்கும் தெரியவில்லை. கடலுக்குள் இழுத்துச் செல்லும் போது, இரயில் நிலையத்திற்கும், இரயிலுக்குமான இடைவெளி சில நூறு மீட்டர்களில் தான் இந்த கொடூர நிகழ்ச்சி அரங்கேறியது விட்டிருந்தது.

ஒரு சில நிமிடங்கள் பயணிகளுக்கு கிடைத்திருக்குமானால், அந்த பாசன்ஜெர் இரயில் நிலையத்தை அடைந்திருக்கும். அதில் பயணித்தவர்களின் உயிர்களும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். ‘விதி சற்றே வலியது’ என்பது போல, அவர்கள் அனைவரின் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது, கடலண்ணை.

தனுஷ்கோடிக்கு முன்பே, புயல் இலங்கையில் உள்ள தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரிலும் பல ஆயிரம் உயிர்களை ஆழிப்பேரலை காவு வாங்கியிருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள், தனுஷ்கோடி கரையில் ஒதுங்க கிடந்தன.

தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின,

”இன்னது நடக்கிறது…” என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லாமல் போயிருந்தது. கடல் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழும்பி, ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. நடுநிசியில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும்…. ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. பெரும்பாலானோர் உறக்கத்திலேயே உயிரைத் தொலைத்திருந்தார்கள்.

இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுத்த இந்த ‘அபாய அறிவிப்பை’ உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல்படத் தொடங்கினார்கள்.

அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி ஓடத் தொடங்கினார்கள்.

இதில், ‘நீச்சல் காளி’ என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார் என்பதால் நன்றி சொல்ல வேண்டியிருந்தது.

அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி அங்கு காணப்படவில்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் ஒதுங்கியாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது…..

ஒரு இரயில் ஒரு நூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் வேறு ஒரு இரயில் சில நூறு உயிர்களைக் காவல் காத்தது. ஆம், பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடியின் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் பெட்டிகள் தான் மொத்த மக்கள் கூட்டமும் உள்ளே சென்று நிரம்பி கதவு ஜன்னல்களை இறுக மூடி பாதுகாத்தது.

இதே நேரம் ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கினார்கள். தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது வதைத்தது.

எதிர்பாராத இச்சம்பவங்கள் அவர்களை பெரிய குழப்பத்தில் தள்ளியிருந்தது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்ப்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியிருந்தது.

இந்த சோக நிகழ்ச்சி பற்றி எதும்மறியாமல் அந்த இரவில் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுது புலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து வெளி உலகம் முழுமையாக அறிந்திருக்கவில்லை.

அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது. படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே இருந்தது.

மற்றுமொரு கொடுமையான செய்தி, தனுஷ்கோடிக்கு குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே அனுப்பப்பட்டு கொண்டிருந்தது.

புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடர்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழல் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.

சோக செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாக வெளிஉலகிற்கு பரவத் தொடங்கியது. காலதாமதமாகத் தான் தமிழக அரசு விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார்.

இந்திய மைய அரசின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட மைய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை ”தேசியப் பேரிடர்” என்று அறிவித்தது.

இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவையான நீரும் உணவும், வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. ”காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம்” என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

எஞ்சிய தனுஷ்கோடியை “சாரதா” என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது அனுப்பப்பட்டிருந்தது. உயிர் பிழைத்த மக்கள் அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னரும் கூட அரசால் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

‘ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை’ என்று ஆழிப் பேரலை முடிவுற்ற மூன்றாம் நாள் தான் அரசிற்கே நினைவு வந்தது.

அந்த இரயிலை மீட்க தேடல் பணி தொடங்கியது. ஒரு சிறு தடயம் கூட கிடைக்காத நிலையில், இரயில் பேரலையினால் கடலோடு கலந்திருக்க வேண்டுமென்று முடிவெய்தி, கடலுக்குள்ளும் இறங்கித் தேடத் தொடங்கினர்.

இருந்தும் இரயிலின் சில இரும்பு துண்டுகளைத் தவிய எவ்வித தடயங்கள் கிடைக்காததால், பயணித்த அனைத்து 115 பயணிகளும் மாண்டு விட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் ‘ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது’ என்று குறிப்பிட்டார்.

தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.

தனுஷ்கோடியில் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னாரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது.

விளைவு 1,500 மக்களின் உயிரைக் குடித்தது. 1,500 ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பையும் கடல் நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் மறைந்துள்ளது. தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து ”ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக”, ஐ.நா. சபை இந்த நிகழ்ச்சியை அறிவித்தது.

நிலைமை இப்படி இருக்க தமிழகமோ புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது. டிசம்பர் 22 மாலை, நடிகர் ஜெமினியும், சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது.

‘அன்றைய இரவுப் பொழுது தனுஷ்கோடியில் இருக்க வேண்டும்’ என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் நடிகர் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை. சாவித்திரி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கையாகவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்று விட்டனர்.

புயலைப் பற்றி நடிகர் ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :

“ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுட்டே இருந்தது. புயல் காத்துக்கு, அப்புறம் நரி ஊளையிடுற சத்தம். இதோடு மழை, எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது.

சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல.”

“அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலைமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது.

அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது.” தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருந்தார்கள் இவ்விரு நடிகர்களும்.

அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்று வரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.

அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ”மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்” என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.

ரயில் நிலையம், தபால் நிலையம், தந்தி ஆலுவலகம், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ”மக்கள் வாழத் தகுதியற்ற…” என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி… சில தினங்களுக்கு முன்பு வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நின்றது. அங்கு எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் சில பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு காணப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. செல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு வரை மக்கள் வாழத் தகுதியற்றது என முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இப்பொழுதும் இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.

இவர்களது வாழ்வு இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிந்து. கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடிக்கு வெளிச்சம் தருகின்றன.

“ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்” என்றார் ஒரு பெரியவர்.

சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது அரிது, பாடல் கேட்கும் சாதனமாக அதை அங்கு பயன்படுத்துகிறார்கள்.

அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம்.

சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள்.

மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.

வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.

சுற்றுல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், ‘மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது’ என்று அரசு அஞ்சுவதால் தனுஷ்கோடியின் நிலைமை கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.

தனுஷ்கோடி சாலையில் அரிச்சல் முனை!

தனுஷ்கோடி சாலையில் அரிச்சல் முனை!

இந்நிலையில், இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுத்து வரும் பாரதிய ஜனதா கட்சி இந்திய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதையடுத்து, இந்திய பிரதமர் திரு. மோடி அவர்கள், இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள இராமன் தனது மனைவி சிதையை இராவணனிடமிருந்து மீட்டு வர தனுஷ்கோடி வந்து சென்றதால், தனுஷ்கோடியின் எல்லையான அரிச்சல் முனை வரை மக்கள் வந்து செல்ல, 9.5 கி.மீ. சாலை ஒன்றை அமைக்க மூன்று ஆண்டுகளாக முன் முயற்சி எடுத்து,  27-07-2017-ல், இராமேஸ்வரம் வந்திருந்த போது, அங்கிருந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் தனுஷ்கோடி சாலையை திறந்து வைத்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: