கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!

கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!

கீழக்கரை அருகே பள்ளி மாணவர்கள் கண்டெடுத்த சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டு!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த சூலக்கல் கல்வெட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் கு.முனியசாமி இப்பள்ளி மாணவர்களுக்கு வரலாற்றுத் தேடலில் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கெனவே இம்மாணவர்கள் இப்பகுதியில் கி.பி.12-13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப்பானை ஓடுகள், மணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போது 7- ம் வகுப்பு மாணவர்கள் சத்தியேந்திரன், யுவராஜ், விஷால், அருள்தாஸ், 6- ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் ஆகியோர் மேலமடையில் சேதுபதிகள் காலச் சூலக்கல் கல்வெட்டைக் கண்டுபிடித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதுபற்றி ராமநாதபுரம் கல்வி மாவட்டத் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுருவுக்குக் கொடுத்த தகவலின் பேரில் அக்கல்வெட்டு படிஎடுக்கப்பட்டது.

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது, “மாணவர்கள் கண்டுபிடித்த சூலக்கல் கல்வெட்டு, வேளானூர் அருகில் உள்ள மேலமடையின் மேற்கே கிழவனேரி கள்ளித்திடலில் நட்டு வைக்கப்பட்டுள்ளது. சூலக்கல் என்பது சிவன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நிலத்தின் நான்கு மூலைகளிலும் வைக்கப்படும் எல்லைக்கல் ஆகும். இங்கு ஒரே ஒரு சூலக்கல் மட்டுமே உள்ளது. மூன்று அடி உயரமும், ஒரு அடி அகலமும் உள்ள இது கடல்பாறையால் ஆனது. இதில் புடைப்புச் சிற்பமாக திரிசூலம், பிறை, சூரியன் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இரு பக்கங்களிலும் கல்வெட்டுகள் உள்ளன. எழுத்துகள் ஆழமில்லாமல் வெட்டப்பட்டுள்ளதால் தேய்ந்துள்ளன. சில எழுத்துகளையே படிக்க முடிகிறது.

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் விசைய எனும் தமிழ் ஆண்டும் பங்குனி மாதமும் தெளிவாக உள்ளன. சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டின் காலம் கி.பி.1714 ஆக இருக்கலாம். இது திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரகுநாத சேதுபதி காலத்தைச் சேர்ந்தது. கீழக்கரை அல்லது உத்தரகோசமங்கை சிவன் கோயிலுக்கு இந்நிலம் தானமாக வழங்கப்பட்டிருக்கலாம். சேதுபதிகள் காலத்தில் நிலதானம் வழங்கப்பட்ட விவரம் செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டு, அந்த நிலம் உள்ள இடத்தில் திரிசூலக்கல் நடுவது வழக்கம். எனவே சூலக்கல் நட்டு வைக்கப்பட்டுள்ள இடம் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட பகுதி என்பதை அறிய முடிகிறது” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: