நங்கவள்ளி, ஏற்காட்டில் 17ம்நூற்றாண்டு புலிக்குத்தி கல், முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

நங்கவள்ளி, ஏற்காட்டில் 17ம்நூற்றாண்டு புலிக்குத்தி கல், முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

நங்கவள்ளி, ஏற்காட்டில் 17ம்நூற்றாண்டு புலிக்குத்தி கல், முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டத்தின் நங்கவள்ளி, ஏற்காடு பகுதிகளில் வரலாற்று ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் மற்றும் பழமையான முதுமக்கள் தாழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்தவர்கள், நங்கவள்ளியை அடுத்த வீரக்கல் பகுதியில் தொன்மைகள் குறித்த ஆய்வு நடத்தினர். இதில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. போரில் இறந்த வீரனுக்கு மட்டுமல்லாது, ஊரைக் காக்கும் வகையில் கொடிய விலங்குகளிடம் போரிட்டு இறக்கும் வீரனுக்கும், நடுகல் நடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்துள்ளது. அந்த வகையில் வீரக்கல்லை அடுத்த செல்லக்கல் திட்டு என்ற இடத்தில் 17ம்
நூற்றாண்டைச் சேர்ந்த புலிக்குத்தி கல் கண்டுப்பிடிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இந்த கல்லில் வீரன் புலியை வேலால் குத்தும் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பலகைக் கல்லால் நடுகல்லிற்கு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இந்த நடுகல்லை வழிபட்டு வருகிறார்கள். இறந்த வீரர்களுக்கு நடும் கல்லை வீரக்கல் என்று அழைப்பர். இந்த ஊரும் அந்த பெயரிலேயே அழைக்கப்படுவது பெருமைக்குரியது என்றனர் வரலாற்று சங்கத்தினர்.

இதேபோல் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள கே.புத்தூர் கிராமத்தில் தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் வகையில் ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில் வாழவந்தி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கே.புதூரில் சாளாங்காட்டுப்பகுதியில், பெருங்கற்காலத்தைச் சார்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது இது கூர்முனைத்தாழி வகையைச்சார்ந்ததாகும். இதுபோன்று முழுமையான தாழி ஏற்காட்டில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இத்தாழி 95 செ.மீ உயரமும் இதன் வாய்பகுதி 19 செ.மீ விட்டமும், தாழியின் வாய் பகுதியின் விளிம்பு 2.5 செ.மீ மொத்தமும் கொண்டதாக அமைந்துள்ளது, தாழியின் கழுத்துப்பகுதி 127 செ.மீட்டர் சுற்றளவும், இதன் நடுப்பகுதி 240 செ,மீ சுற்றளவு கொண்டதாக அமைந்துள்ளது. தாழியின் கழுத்துப்பகுதிக்கு சற்றுக்கீழ் ஒரு கயிறு போன்ற அமைப்பு, அமைக்கப்பட்டுள்ளது, இந்த கயிற்றின் இரு முனைகளும் சேரும் இடத்தில் 10 செ.மீட்டர் இடைவெளி விட்டு கீழ் பகுதியை நோக்கி 10 செ,மீட்டர் இறங்குவது போல் அமந்துள்ளது. இதன் இடைவெளியில் ஒரு சிறுதுண்டு மேல் நோக்கி செல்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. இது இறந்தவரின் ஆன்மா வெளியேறுவதை குறிப்பதாகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெரிய மண்பாண்டத்தில் இறந்தவர்களின் உடல் அல்லது எலும்புகளோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து வைத்து நிலத்தடியில் புதைப்பர். அதன் மேற்பகுதியில் பாறைக்கற்களை கொண்ட மூடி விடுவார்கள். இது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னமாகும். இதன் மூலமாக இப்பகுதியில் தொல் பழங்குடிகள் வாழ்ந்ததும் அவர்கள் தொன்மையான நாகரீகத்தை பின்பற்றியதும் தெரியவருகிறது. மேலும், இப்பகுதியில் சில முதுமக்கள் தாழிகள் வீடு கட்டும்போதும், விவசாயத்திற்காக நிலத்தை பண்படுத்தும் போதும் மண்ணால் மூடப்பட்டுள்ளது என்றும் ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: