திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே, கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

விஜய நகர பேரரசர் காலத்து ‘ஏறு தழுவல்’ வீரனின் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன் காந்தி, அமிர்தாலயா கல்வியியல் கல்லூரியின் பொருளாளர் முனிசாமி ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த அம்மணாங்கோயில் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரிய ஏரிக்கரையில் ‘ஏறு தழுவல்’ வீரனின் உருவம் பொறித்த நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதுகுறித்து பேராசிரியர் மோகன் காந்தி, கூறும்போது, “திருப்பத்தூரிலிருந்து மூக்கனூர் வழியாக நாட்றாம்பள்ளிக்கு செல்லும் சாலையில் அம்மணாங்கோயில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டோம்.

அதே பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் இரட்டைப் பனை மரத்தடியின் அருகே ‘ஏறு தழுவல்’ வீரனின் உருவமும், காளையின் உருவமும் பொறித்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளை கொண்டு பார்த்தால், கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜய நகர பேரரசர் காலத்தை சேர்ந்தவையாகும்.

4 அடி அகலமும், 4 அடி உயரத்தில் இந்த நடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல்லில் வீரன் கொண்டையிட்டு, கழுத்தில் ஆபரணமும், கைகளில் கடகமும் அணிந்துள்ளார். வலது கையில் மாட்டை அடக்கியதற்கான அடையாளமாக சாட்டையும், கீழ் பகுதியில் வாளும் காணப்படுகிறது. இடது கை மாட்டின் கொம்புகளை பிடித்துக்கொண்டுள்ளார். மாட்டின் உருவம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் இடது கால் மாட்டின் மேல் உள்ளது. இது மாட்டை அடக்கியதற்கான குறியீடாகும். வீரனின் இடுப்பில் உறைவாள் உள்ளது.

கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஏறு தழுவல் விளையாட்டு இருந்துள்ளது என்பதை இந்த நடுகல் நமக்கு உணர்த்துகிறது. இந்த விளையாட்டை ‘ஏறு தழுவல்’, ‘மஞ்சு விரட்டு’, ‘எருதுக்கட்டு’, ‘ஜல்லிக்கட்டு’, ‘மாடுபிடி விளையாட்டு’ என பல பெயர்களில் மக்கள் கூறுகின்றனர். ஏறு தழுவல் விளையாட்டு முல்லை நிலத்துக்கு உரியதாகும். சங்க இலக்கிய நூலான கலித் தொகையில் முல்லைக் கலியில் ஏழு தழுவல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடுகல்லை, இப்பகுதி மக்கள் ‘போத்தராஜா’ என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர். ஆடி மாதத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் வழிபடுகின்றனர்”என்றார்.

  • தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: