கீழக்கரை அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சீன பானை ஓடுகள் கண்டெடுப்பு!

கீழக்கரை அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சீன பானை ஓடுகள் கண்டெடுப்பு!

கீழக்கரை அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சீன பானை ஓடுகள் கண்டெடுப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 1,000 ஆண்டுகள் முந்தைய பாசிகள், மணிகள், சீன நாட்டுப் பானை ஓடுகளை கண்டுபிடித்துள்ளனர்.

கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி மாணவர்களுக்கு வரலாற்றுத் தடயங்கள் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார். இவர் ஏற்கெனவே தனது சொந்த ஊரான பேரையூரில் பாண்டியர் காலக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் விடுமுறை நாட்களில் தங்கள் பகுதிகளில் பழமையான தடயங்களைத் தேடியுள்ளனர். அப்போது கீழக்கரை அருகே மேலமடை, குலபதம் ஆகிய கிராமங்களில் பச்சை, பளிங்கு நிற மணிகள், போர்சலைன், செலடன் வகை சீனநாட்டுப் பானை ஓடுகள், பச்சை நிற கவண்கல், அரைப்புக்கல், இரும்புத் தாதுக்கள், சங்கு, சுடுமண் கெண்டியின் மூக்குப் பகுதி, மூடி, தீட்டுக்கல் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அதை ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

ஆசிரியர் முனியசாமி ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுருவுக்கு தகவல் தந்துள்ளார். இதுகுறித்து வே. ராஜகுரு கூறியதாவது,

கீழக்கரை அருகே குலபதம் தண்டூரணி பெரியதோப்பு திடலிலும், மேலமடையின் மேற்கே கிழவனேரி கள்ளித்திடல் பண்ணைக்குட்டை தோண்டிய இடத்திலும் மாணவர்கள் பழம்பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர்.சீனநாட்டு போர்சலைன் வகை மண்பாண்டத்தில் வெள்ளை ஓட்டின் மேல் நீலநிறப்பூ போன்ற வடிவம் வரையப்பட்டுள்ளது. வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்படும் இது உப்புப்பூச்சு மூலம் பளபளப்பாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாசிநிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மண்பாண்டங்களில் பச்சை, இளம்பச்சை, சாம்பல், பழுப்பு நிறங்கள் உண்டு. இதில் கிண்ணம், தட்டு போன்றவை செய்யப்படுகின்றன. இங்கு கிடைத்தது இளம்பச்சை நிறத்தில் உள்ள கிண்ணத்தின் அடிப்பகுதி ஆகும்.

மாணவர்களின் உதவியோடு மீண்டும் அப்பகுதிகளில் களஆய்வு செய்தபோது இடைக்காலப் பானை ஓடுகள் காணப்பட்டன. சங்ககால கருப்பு சிவப்பு பானை ஓடுகள் இல்லை. எனவே இப்பொருள்கள் வரலாற்றின் இடைக்காலமான சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என அறிய முடிகிறது.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம், தொண்டி, பெரியபட்டினம் உள்ளிட்ட பல ஊர்களில் சீனநாட்டுப் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தற்போது கடற்கரை நகரமான கீழக்கரைக்கு மிக அருகில் இவை கிடைத்துள்ளதன் மூலம் இப்பகுதிகளும் சீனாவுடன் நேரடி வர்த்தகத் தொடர்பில் இருந்துள்ளதையும், சீன நாட்டு வணிகர்கள் இங்கு வந்து சென்றுள்ளதையும் அறிய முடிகிறது. சீனமன்னருக்கும், பாண்டியருக்கும் நல்ல நட்புறவு நிலவியுள்ளது. பாண்டிய நாட்டு முத்துக்கு உலகம் முழுவதும் தேவை இருந்துள்ளது. சீனாவில் சூவான் சௌ எனும் துறைமுக நகரில் உள்ள சிவன் கோயிலில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு உள்ளது. இது சீனர் தமிழர் உறவுக்கு சான்றாக விளங்குகிறது, என்றார்.

வரலாற்றுத் தடயங்களை ஆர்வமுடன் தேடிக் கண்டுபிடித்த மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழறிந்த பெருமாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: