லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய இலங்கை தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் சைகை காட்டிய வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி லண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லண்டனில் உள்ள இலங்கை மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திக் கொண்டு கூடியிருந்த இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2009 ஆம் ஆண்டில் இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த இன அழிப்பு குறித்தும் தற்போது தமிழர்களின் பகுதியில் உள்ள இலங்கையின் ரகசிய ராணுவ முகாம்களுக்கும் கண்டனம் தெரிவித்து குரல்கள் எழும்பின.
தூதரகத்திற்கு வெளியே இலண்டன் வாழ் தமிழ் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்கள், தமிழர் தலைவர் பிரபாகரன் எங்கள் தலைவரென கோசமிட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்க தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்திருந்த இலங்கை இராணுவ அதிகாரியொருவரே ஆர்ப்பாட்டகாரர்களை கழுத்து வெட்டி படுகொலை செய்யப்போவதாக மிரட்டும் வகையில் தனது கைகளால் கழுத்தை அறுப்பது போன்று சமிக்கை செய்து காண்பித்துள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை நோக்கி பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தை சேர்ந்த இராணுவ அதிகாரியான ” பிரியங்க பெர்னாண்டோ ” என்பவர் தமிழ் செயற்பாட்டாளர்களிற்கு விடுத்த கொலை மிரட்டல் காணொலி அனைத்து இடங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகளை கழுத்தறுத்து கொலை செய்த வகையில் இலங்கை இராணுவம் இன அழிப்பு இராணுவமென மக்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையினில் இலண்டனில் அதே மனப்பாங்குடன் படை அதிகாரியொருவர் செயற்பட்டமை தொடர்பில் சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோசம் வலுப்பெற்றுள்ளது.