‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்!

‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித் அகமது ஹஸ்மத், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த 20ஆம் தேதி சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் சர்ச்சைக்குரிய நிலைமையை மாற்ற முற்படும் இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டமை குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் முழுமையாக முடக்கப்பட்டு, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதையும், இந்த நடவடிக்கை ஜக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவை மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதையும் ஜனாதிபதிக்கு விளக்கியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ள பாகிஸ்தான், ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின்படி காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு அமைய இந்த சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும் என கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

சார்க் அமைப்பை மீண்டும் செயல்படுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பேச்சுவார்த்தையை நடத்த இலங்கையின் மத்தியஸ்தம் குறித்தும் ஜனாதிபதி கூறியிருந்ததாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பிராந்தியத்தின் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டியது அவசியம் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியதாக பாகிஸ்தான் உயர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர் ஆணையரின் கோரிக்கைக்கு அமையவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் உயர் ஆணையரின் கருத்துகளை கவனமாக செவிமடுத்த ஜனாதிபதி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையுடன் மிக நெருங்கிய நட்புறவை பேணி வருவதாக கூறியுள்ளார்.

பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதே நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிபிசி

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: