ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி!

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி!

ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி!

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில் கடும் அமளி ஏற்பட்டது. வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைந்ததாக சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். முன்னதாக ராஜபக்சே வெளிநடப்பு செய்தார். கடும் அமளியை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின் உதவியுடன், கடந்த 2015-ம் ஆண்டு அதிபராகப் பதவி ஏற்றார் சிறிசேனா. இதையடுத்து, அதிபர் சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கூட்டணியும், ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன.

3 ஆண்டுகள் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென வாபஸ் பெற்ற சிறிசேனா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார். சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தததால் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்தார். அதன்பின், ராஜபக்சேயுடன் (இலங்கை மக்கள் முன்னணி) கூட்டணி அமைத்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்து, பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.பெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது செல்லாது என்று விக்ரமசிங்கே எதிர்ப்புத் தெரிவித்தார்.

சபாநாயகர் ஜெயசூர்யாவும் ராஜபக்சே சட்டப்பூர்வ பிரதமர் இல்லை என்று அறிவித்தார். இதனால் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் அதிபர் சிறிசேனா முடிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. நாடாளுமன்றத்தை முடக்கி உத்தரவிட்ட அதிபர் சிறிசேனா, வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். திடீர் திருப்பமாக, மகிந்த ராஜபக்சே, நேற்று சிறிசேனாவின் சுதந்திரா கட்சியில் இருந்து வெளியேறி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்தார். அவருடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் கட்சி மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி சார்பில் தேர்தலில் நின்று வென்றவர்கள்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்ததை எதிர்த்து இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர் ஒருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நேற்று விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்குப் பிறகு, முன்னதாக அதிபர் மைத்திரி அறிவித்திருந்தபடி நவம்பர் 14 அன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்படும் என சபாநாயகர் அலுவலகம் நேற்று தெரிவித்தது. அதற்கு முன்னதாக, காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தைச் சபாநாயகர் கரு ஜயசூர்யா கூட்டியுள்ளார்.

மேலும், இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் இலங்கை அதிபர் மைத்திரி கலந்துகொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால் உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றம் வந்த ராஜபக்‌சே முதலில் தன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் வந்திருந்த ரணில் ஆதரவாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் முதலில் ராஜபக்‌சே மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. இதையடுத்து, ராஜபக்‌சே நாடாளுமன்றத்தைவிட்டு வெளிநடப்பு செய்தார். அங்கு கூச்சல் அதிகமானதை அடுத்து இலங்கை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் திடீரென ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ராஜபக்‌சே தோற்கும் நிலை உருவாகியுள்ளது இதன் காரணமாகவே அங்கு கூச்சல் நிலவிவருவதாக கூறப்பட்டுள்ளது.

ராஜபக்‌சே வெளியேறிய நிலையில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் அவருக்கு எதிரான தீர்மானம் வெற்றியடைந்துள்ளது. ராஜபக்‌சே பதவி இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: