‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்’ – மஹிந்த ராஜபக்ச!

‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்’ – மஹிந்த ராஜபக்ச!

“வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும் எனவும், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு” என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதம செய்தி ஆசிரியர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழர்களுக்காக தீர்வுத்திட்டம், தம்மிடமிருந்தே கிடைக்க வேண்டும், தம்முடன் இணைந்து செயற்படும் பட்சத்தில், அதற்காக திட்டம் விரைவில் கிடைக்கும். தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களுடன் என்றும் ஒன்றாகவே செயல்படும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான திட்ட வரைவு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தையும் தாண்டிய (13 பிளஸ்) அதிகாரத்தை வழங்குவதாக கூறிய அவரது தற்போதைய நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். தான் அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளின் விடுதலை :

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவரங்களை தான் கோரியுள்ளதாகவும், அந்த விவரங்கள் கிடைத்தவுடன் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கைதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளதாக கூறிய அவர், அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்வது கடினம் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: