இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கோட்டாபய ராஜபக்சே அறிவிப்பு!

இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டனர் – கோட்டாபய ராஜபக்சே!

இலங்கை உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை.

உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கர் உடனான சந்திப்பின்போது கோட்டாபய ராஜபக்சே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் பாதுகாப்பு படைகளின் வசம் உள்ளதாக அவர்களது உறவினர்கள் நம்புகின்றனர். ஆனால், அதை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்று ஹானா சிங்கர் உடனான சந்திப்பு குறித்து ஜனவரி 18 அன்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காணாமல் போனவர்கள் விவகாரத்தை தீர்ப்பதற்கான தமது திட்டங்கள் குறித்து கோட்டாபய ராஜபக்சே விவரித்தார். அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை விவரித்தார்,” என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

“இதை காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். என்ன நடந்தது என்று அவர்களின் குடும்பங்களுக்கு தெரியவில்லை என்பதால், அவர்கள் காணாமல் போனதாகக் கூறுகின்றனர்,” என்று கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தின்படி இறப்புச் சான்றிதழ் இல்லாமல், காணாமல் போனவர்கள் விட்டுச்சென்ற சொத்துகள், வங்கிக் கணக்கில் உள்ள பணம், பரம்பரை சொத்துகள் ஆகியவற்றை அவர்களது குடும்பத்தினரால் அடைய முடியாது.

உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஐ.நா மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

எனினும் இலங்கையில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டன. இது தங்கள் உள்நாட்டு விவகாரம் என்றும், போர்க் குற்றச்சாட்டுகளை உள்நாட்டிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

இலங்கை ஜனாதிபதியாக இருந்த, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சே மற்றும் கோட்டபாயவிற்கு எதிரானவர்கள் என்று கருதப்பட்ட செயல்பாட்டாளர்கள், தொழில் அதிபர்கள், ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் போர் முடிந்த பின்னரும் தொடர்ந்தன. அவர்கள் இப்போது வரை மீண்டும் கண்டுபிடிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ராஜபக்சே சகோதரர்களின் தரப்பு மறுத்து வருகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: