2 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் ; உதவிய தமிழர்!

2 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் ; உதவிய தமிழர்!

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு நடத்தும் பொருட்டு இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி நிலவில் சாஃப்ட் லேண்டிங் முறையில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் நிலவை நெருங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், விக்ரம் லேண்டரின் நிலை கேள்விக்குறியானது.

இதைத் தொடர்ந்து நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வேகமாக மோதியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. எனினும் விக்ரம் லேண்டரின் நிலை குறித்து தொடர்ந்து மர்மம் நிலவி வந்தது. இந்நிலையில் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாசாவும் சேர்ந்தது. நாசாவின் விண்கலமான LRO (Lunar Reconnaissance Orbiter) விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதிக்கு மேலே பயணித்தது.

அது மட்டுமன்றி, அந்தப் பகுதியைப் புகைப்படமும் எடுத்தது. ஆனால், அந்தப் பகுதியில் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால், அந்தப் புகைப்படங்களில் விக்ரம் லேண்டரை அடையாளம் காண முடியவில்லை. நாசாவின் விண்கலம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது முடியாமல் போனதால் விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது மர்மமாகவே இருந்தது.

எனினும் சந்திரயான் 2 திட்டம் முழுமையான தோல்வி அடையவில்லை. காரணம் ‘சந்திரயான் 2 ஆர்பிட்டரின் செயல்பாடு தொடர்ந்து திருப்தியளிக்கும் வகையில் இருக்கிறது. மேலும், ஆர்பிட்டர் திட்டமிட்ட பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது’ என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாசா தற்போது விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசா புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்தப் படத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய புள்ளியும், சிதறிய விண்கலப் பகுதிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள பச்சை நிறப் புள்ளிகள் விண்கள குப்பைகளை குறிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

நீல நிறப் பகுதிகள், லேண்டர் மோதியதால் ஏற்பட்ட இடத்தைக் குறிக்கிறது. கடந்த மாதம் 11-ம் தேதி நிலவின் தென் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூடவே, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியன் என்பவருக்கு நாசா நன்றியைத் தெரிவித்துள்ளது.

சண்முக சுப்ரமணியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். விக்ரம் லேண்டர் மோதுவதுக்கு முன் பின் கிடைத்த புகைப்படங்களை கொண்டு இதைக் கண்டுபிடிக்க உதவியுள்ளார் சுப்ரமணியன். இது தொடர்பாக நாசா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.

அதில், “விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க உதவியதற்கு நன்றி.. நாசாவின் LROC டீம்(நிலவை ஆய்வு செய்யும் நாசா குழு) குறிப்பிட்ட அந்த இடத்தில் சில பாகங்கள் இருந்ததை கண்டுபிடிக்க முடிந்தது. உங்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சண்முக சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த அக்டோபர் மாதம் இரு புகைப்படங்களைப் பதிந்து, “இந்தப் பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்திருக்கலாம்” என நாசா மற்றும் இஸ்ரோவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அதன் பின்னர் நாசாவின் நிலவை ஆய்வு செய்யும் குழு குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கூடுதல் ஆய்வு நடத்தி தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: