கனடாவில் மனைவி இறந்த மறுநாளே கணவரும் கொரோனா தாக்கி மரணம்!

நேற்று 13-ம் தேதி கனடா, டொரன்டோ நகரில் 56 வயதான திருமதி. புஸ்பராணி கொரோனா தாக்கி மரணமடைந்தார் என்ற செய்தியை வெளியிட்டோம்.

இன்று (கனடாவில் 14-ம் இன்று தேதி) திருமதி புஸ்பராணியின் கணவர் திரு. நாகராஜா அவர்கள் கொரோனா தொற்றால் மாண்டு போனார் என்ற செய்தி மேலும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

https://worldtamilforum.com/america/tamil-lady-died-due-corona-canada/
—————————
கனடா உதயன் இதழ் புகழாரம் :

துணைவியாரின் மறைவை அறியாமலேயே ‘உதயன்’ நண்பர் சோதி (நாகராஜா தேசிங்குராஜா) அவர்களும் மரணமடைந்தார்! …..
————————————————————————

[மேலே காணொளி, நாதன் கதிர்காமநாதன், மறைந்த சோதி குடும்ப உறவினர். இரண்டு காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன. உதயன் தொடர்பானது…. பார்க்க…]

கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் பிரம்டன் மற்றும் மிசிசாகா, நோர்த்யோர்க் ஈற்றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை மிகவும் நேர்த்தியாக தொடர்ந்து ஆற்றி வந்த திரு. சோதி (நாகராஜா தேசிங்குராஜா) அவர்களின் துணைவியார் திருமதி சோதி ,கொடிய ‘கொரோனா’வின் பிடிக்குள் அகப்பட்டு மரணத்தை தழுவினார் என்ற சோகமான செய்தியை பதிவு செய்திருந்தோம்.

மேலும் எமது நண்பரும் பணியாளருமான திரு சோதி அவர்கள் கூட மேற்படி கொடிய நோயின் பாதிப்புக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்ற அச்சம் தரும் செய்தியையும் இங்கு பதிவு செய்திருந்தோம்..

ஆனால் இன்று எம்மை வந்தடைந்த இரண்டாவது கொரூரச் செய்தியாக நண்பர் சோதி அவர்களும் இறைபதம் அடைந்தார் என்றிருந்தது.

தமது மூன்று பிள்ளைச் செல்வங்களை தவிக்க விட்டு சென்று இந்த அன்புத் தம்பதியின் இழப்புக்களினால் அவர்களது செல்வப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களோடு நாமும் எமது கண்ணீரை அஞ்சலிகளாக்குகின்றோம். தவித்தபடி கண்ணீர் விடுகின்றோம்.

நண்பர் சோதி அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் எமது உதயன் பிரதிகளை தனக்கு ஒப்படைக்கப்பெற்ற பிரதேசத்திற்குள் அடங்கும் தமிழர் வர்த்தக நிலையங்கள், இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள், சமூக அமைப்புக்கள் அத்துடன் வேறு மொழிகள் பேசும் வர்த்தகர்கள் ஆகியோருக்கு விநியோகிக்கும் பொறுப்பை செவ்வனே ஆற்றி வந்தார்.

சில வேளைகளில் தனது துணைவியாரோடும் இணைந்து தனது பணியைச் செய்வார். சில சந்தர்ப்பங்களில், தங்கள் அழகான மூன்று பிள்ளைச் செல்வங்களையும் நாம் ஏற்பாடு செய்யும் விழாக்கள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு அழைத்து வருவார்.

அவரது பிள்ளைச் செல்வங்களில் இருவர் எமது விழாக்களில் தொண்டு செய்யும் செல்விகளாக காட்சி தருவார்கள். பெரும் பணிகளைச் செய்வார்கள் இவ்வாறாக சோதியின் குடும்பமே எமது உதயன் நிறுவனத்திற்கு பெரும் ஆதரவுக் கரமாக விளங்கியது.

நாம் கலங்கிப் போய் உள்ளோம். ஒரு அழகியதும் அற்புதமானதுமான குடும்பத்தின் தலைமை கொடிய நோய் ஒன்றினால் தகர்க்கப்படடு விட்டது என்பதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

நண்பர் சோதி அவர்கள் மனம் திறந்து பேசும் பண்பு கொண்டவர். அவரது துணைவியாரின் இழப்பை அறிந்து கொண்ட பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூட எம்மோடு தொடர்பு கொண்டு தங்கள் அனுதாபங்களை பகிர்ந்து கொண்டனர். பத்திரிகையின் பிரதிகள் சரியான நேரத்திற்கு அந்தந்த இடங்களில் வைக்கப்படுவதை எப்போதும் மிகவும் உறுதியாகக் கடைப்பிடித்தவர்.

வெள்ளிக்கிழமை தவிர்த்த ஏனைய நாட்களையும் எமக்காக அர்ப்பணித்து நின்றவர். அவரது துணைவியார் மிகவும் அமைதியானவர். அவருடனான உரையாடல்கள் சில வேளைகளில் புன்னகை செய்வதோடு முடிந்து விடும்.

மறைந்த சோதி அவர்களும் அவரது துணைவியார் அவர்கள் ஒன்றாக முழு நேரப் பணியாற்றிய இடம் ரொரோன்ரோ விமான நிலையத்திற்கு அருகில் இயங்கும் ஒரு நிறுவனமாகும். அங்கு கூட இவர்கள் இருவரும் தங்கள் சிறந்த பணிக்காக உரிமையாளர்களாலும், சக பணியாளர்களாலும் பாராட்டப்பட்டவர்கள். நேசிக்கப்பட்டவர்கள் என்தையம் நாம் நன்கு அறிந்திருந்தோம்.

பெற்றோர்கள் இருவரும் தாம் கடமைகளில் கண்ணாக இருந்து தங்கள் முதலாவது மகளை ஒரு சட்டத்தரணியாக்கி மகிந்தவர்கள். ஏனைய இரண்டு பிள்ளைகளும் கல்வியில் சிறப்பாகத் தேறி சாதனைகள் படைத்து வருகின்றனர்.

இவ்வாறான சிறப்பு கொண்ட ஒரு குடும்பத்தின் தலைவனும் தலைவியும் கொடிய நோய் ஒன்றினால் அழிக்கப்பட்ட இந்த சம்பவம் எம்மை மட்டுமல்ல, பிள்ளைகள் உறவினர்களை மட்டுமல்ல, இந்த இழப்புக்கள் பற்றி அறிகின்றவர்களின் கண்களை குளமாக்கும் என்பதையும் நாம் நன்கு உணர்கின்றோம்.

இறந்தவர்கள் மீண்டு வரமாட்டார்கள் என்பதும் அவர்களது நற்பண்புகள் தான் எம்மோடு கூடவே பயணிக்கப் போகின்றன என்பதும் நாம் அறிந்தவதையே. எனவே நாம் அனைவரும் சோதி தம்பதியின் பிள்ளைச் செல்வங்களுக்காகவும் பிராத்தனை செய்த வண்ணம் அவர்களது எதிர்காலம் சிறப்புடன் இருக்க துணையாக இருப்போம் என்ற வார்த்தைகளை அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றோம்.

இங்கே காணப்படுகின்ற ஒரு புகைப்படத்தில் எமது ‘ உதயன்’ பத்திரிகையின் ஆயிரமாவது இதழ் வெளியீட்டு விழாவிற்கு கனடாவிற்கு வருகை தந்த தமிழ் நாட்டின் சிறந்த பேச்சாளர்களை தம்பதி சகிதம் விமான நிலையத்தில் மறைந்த சோதி தம்பதி பூமாலை அணிவித்து வரவேற்றனர். இவ்வாறான ஆயிரம் புகைப்படங்களில் இந்த அன்புத் தம்பதி தொடர்ந்து எம்மை பார்த்துக் கொண்டே இருப்பார்கள் என்பதே எமது நம்பிக்கை.

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: